கேபிசி.,யில் ஷாரூக் சாதிப்பாரா?விளம்பரம் மட்டுமே 150 கோடி ரூபாய்
—————————-
மும்பை: இன்னும் சில நாட்களே உள்ளன, புது “கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சி துவங்க. கே.பி.சி.,யில் தொடர்ந்து அமிதாப்பின் சிங்கக் குரலை கேட்டுவிட்டு, இப்போது ஷாரூக்கான் பேச்சை ரசிப்பரா “டிவி’ நேயர்கள்? இப்போதே அந்த பரபரப்பு ஆரம்பித்துவிட்டது.
ஸ்டார் “டிவி’யில் இந்தியிலும், ஸ்டார் விஜய் சேனலில் தமிழிலும் ஒளிபரப்பாக உள்ளது. இந்தியில் எந்த அளவுக்கு பிரபலம் ஆகப் போகிறது என்பது ஷாரூக் கையில் தான் உள்ளது. * கடந்த கேபிசி.,-1, கேபிசி.,-2 ஆகியவற்றில் பெரிதும் கவர்ந்துவிட்டவர் அமிதாப். அவர் அளவை தாண்டி, ஷாரூக் சாதிப்பாரா, கவர்வாரா? * விளம்பரம் வருவதில் பெரிதும் பாதிப்பில்லை. ஆனால், 150 கோடி ரூபாய் விளம்பரங்கள் குவிந்ததற்கு ஏற்ப தொடர் விறுவிறுப்பாக இருக்குமா? * மக்கள், ஷாரூக்கின் இந்தி பேச்சை கேட்டும், அமிதாப்பை விட நன்றாக இருக்கிறது என்று பெயர் வாங்குவாரா? மும்பை ,டில்லி, கோல்கட்டா மக்கள் என்ன நினைக்கின்றனர்? இப்படி ஒரு சர்வேயை முத்ரா மீடியா ஸ்பெஷலிஸ்ட்டான, “ஆப்டிமம் மீடியா சொல்யூஷன்ஸ்’ ஏஜன்சி எடுத்தது. மூன்று நகரங்களிலும் சில நூறு பேரிடம் எடுத்த சர்வேயில், 71 சதவீதம் பேர், “ஷாரூக்குக்கு ஒரு சான்ஸ் தரலாம்’ என்றனர்.
“நாங்கள் நிச்சயம், ஷாரூக்கின் கே.பி.சி.,-3 ஐ பார்ப்போம்’ என்று 21 சதவீதம் பேர் கூறினர். பணக்கார வர்க்கத்தினருக்காக விளம்பரம் செய்யும் உயர் கம்பெனிகள் பலவும் சந்தோஷத்தில் தான் உள்ளன. காரணம், அவர்கள் ஏற்கனவே ஷாரூக்கை வைத்துத்தான் விளம்பரம் செய்து வருகின்றனர். அதனால், இந்த நிகழ்ச்சியால், அவர்களுக்கு தங்கள் பொருட்களுக்கு அதிக மவுசு கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். கே.பி.சி,.-3 நிகழ்ச்சி தொடருக்கு மட்டும் 150 கோடி ரூபாய் அளவுக்கு விளம்பரங்கள் இப்போதே “புக்’ செய்யப்பட்டுவிட்டன. ஆனால், சிக்கல் என்னவென்றால், உலகக்கோப்பை கிரிக்கெட் நேர்முக ஒளிபரப்புகளுக்காகவும், சிறப்பு நிகழ்ச்சிகளுக்காகவும் 250 கோடி ரூபாய் அளவுக்கு விளம்பரங்களை இந்த நிறுவனங்கள் ஒதுக்கி உள்ளன. கே.பி.சி.,-3, உலகக்கோப்பை இரண்டும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகும் என்பதால், சில நாட்கள், கிரிக்கெட் ரசிகர்கள், கே.பி.சி.,யை விட, உலகக்கோப்பை கிரிக்கெட் நிகழ்ச்சிகளை தான் பார்ப்பர் என்ற தர்மசங்கடத்தையும் ஷாரூக் கடந்தாக வேண்டும். அமிதாப்பை விட அவர் சிறப்பாக செயல்பட்டு, கே.பி.சி.,-3 ஐ சாதிக்க வைப்பார் என்று பலரும் எதிர்பார்த்தாலும், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஒளிபரப்புகள் அவர் எண்ணத்தில் மண்ணை போடாமல் இருக்க வேண்டும் என்ற பயமும் பலரிடம் உள்ளது.
Thanks to : Dinamalar.com